தஞ்சம் அடைந்தேன் உன்னை + விருத்தம்


தற்பெருமைகளையே பேசி தவறுகள் பற்பலவும் செய்தே சதா

கற்பனை உலகே பரமானந்தம் என்று உழன்று திரிந்த இச்

சிறியோனை மாயையெனும் பிடியில் இருந்து அகற்றி உன்தன்

திருவடியே பேரின்பம் என்பதை அறிய வைத்தாயே ஶ்ரீராமா

பல்லவி

தஞ்சம் அடைந்தேன் உன்னை நான் தசரதராஜகுமாரா

தரணியெங்கும் நிறைந்திருக்கும் அயோத்தி மாநகர் மன்னா

அனுபல்லவி

வஞ்சனைகள் இன்றி இப்புவியில் யாவர்க்குமே அருள்புரியும்

அஞ்சனை மைந்தன் சதா ஜபித்தே மகிழ்ந்திடும் ராமாஶ்ரீராமா

சரணம்

சஞ்சலங்களை தீர்த்திடும் கோசலை மகிழ் ஆனந்த ராமனாய்

நெஞ்சை நிமிர்த்தி வில் எடுத்து தொடுத்த கோதண்டராமனாய்

கொஞ்சும் கண்களால் சீதா தேவியை நோக்கிய சீதாராமனாய்

வாஞ்சையுடனும், பக்தர்களை அரவணைக்கும் ராஜாராமனாய்

பஞ்சம், பிணி இன்றி இப்பூவுலகை காத்திடும் பட்டாபிராமனாய்

சஞ்சீவிமலை யெடுத்த கேசரிசுதன் மார்பில் உறைந்த ஶ்ரீராமா