கோபாலனை மாயாஜாலனை தரிசித்து பேரானந்தம்


பல்லவி

கோபாலனை மாயாஜாலனை தரிசித்து பேரானந்தம் பெறுவோமே

பூபாலனாய் கையில் கோலுடன் புன்முறுவல் தவழ நிற்கும் வித்யாராஜ


அனுபல்லவி

மாநிலத்தில் நமக்கு அருள் புரியவே தட்ஷிண துவாரகைக்கு வந்து

மாடு கன்று மேய்ப்பவர் போல் அன்பர்களின் மனதை கவரும் யாதவ


சரணம் (1)

ஓர் இரவிலே தனது அன்னையர்களை மாற்றிய மாயனான பாலன்

காரிருள் வண்ணனாம் அந்த கோடிசூர்யபிரகாச புவனசுந்தர சந்தான


சரணம் (2)

ஆய்ச்சியரின் இல்லங்களில் புகுந்து வெண்ணெய் திருடிய கள்வன்

தாய்க்கு வாயில் மூவுலகையும் காட்டி கண்சிமிட்டிசிரித்த நவனீத


சரணம்(3)

நாமங்கள் பல்லாயிரம் உள்ள சியாமசுந்தரரான மன்மதரூபனை

தாமோதரனாய் தாய் யஸோதையால் கட்டுண்டு நின்ற நந்தகோப


சரணம்(4)

கோபியருடன் பிருந்தாவனத்தில் ஆடிப்பாடிய கண்ணன் வண்ண

குழல்ஊதி அனைவரின் மனதையும் கொள்ளைகொண்ட வேணு


சரணம் (5)

கோவர்த்தன மலையை குடையாய் எடுத்தே யாதவர்களையும் மற்ற

ஜீவராசிகளையும் காத்தே நம்மில் ஒருவனாய் கலந்த ஆனந்த


சரணம் (6)

பார்த்தனுக்கு தேரோட்டியாய் சென்று பல உபதேசங்களையும்

கீதையாய் சொல்லி பாமரருக்கும் புரியவைத்த அந்த சாரதியான


சரணம் (7)

ஒற்றை வஸ்த்திரத்தில் குண்டலங்கள் மின்ன சலங்கைகள் ஜதிபாட

ஒய்யாரமாய் நின்றுகொண்டே கடைக்கண்ணால் அருள் பாலிக்கும் ராஜ