ராதையும் கோதையும்
பல்லவி
முகில் வண்ணனை நந்தகோப பாலனை தங்களின்
பக்தியால் கட்டியது அந்த ராதையா இந்தக் கோதையா
அனுபல்லவி
கண்ணனுடன் பிருந்தாவனத்தில் அவன் குழலிசையில்
தன்னை மறந்தே ரஸித்து அவனுடனே கட்டுண்டு சதா
மனதில் கண்ணனின் லீலைகளில் தானும் மயங்கியே
வெண்ணெய் திருடிய கள்வனை தனதாக்கிய ராதையா
சரணம் (1)
கண்ணனுக்கே தான் என்று அவனை நினைந்துருகி
பண்கள் பல தொடுத்து பாமாலையாய் கட்டி தினமும்
வெண்பொங்கலை பிரஸாதமாய் கண்ணனுக்களித்து
கண்களால் பருகியே அவனுடன் கலந்த கோதையா
சரணம் (2)
சீதையாக அவதரித்தே ஶ்ரீராமருக்கு மாலையிட்டவளே
ராதையாயும் கோதையாகவுமாய் இந்த பூவுலகிற்கு வந்து
பூபாலனையே தங்களின் பக்தியால் கட்டி ஆனந்தித்தனரே
சீதையாய் ராதையாய் கோதையாயும் வந்தது ஶ்ரீமஹாலஷ்மியே