கோகுலபாலன் ஶ்ரீகிருஷ்ணன் குருவாயூர் வந்தானே + விருத்தம்


விருத்தம் (குருவாயூரப்பன்)


பிரளய நீரில் மிதந்த பாலனை, பரந்தாமனை, உன்னி கிருஷ்ணனை

பரவஸமாய் குருவும், வாயுவும் பார்த்து அள்ளி அணைத்து

ஆனந்தக் கூத்தாடியே, துள்ளி ஓடும் பாலகனுக்கோர் இடம் தேடியே

பார் முழுதும் சுற்றி வந்திட, அங்கோர் தடாகம் அருகில்

சிவனும், சக்தியும் நடனம் ஆடுவதை பார்த்து, பாலகனின் பிரதாபத்தை

அவர்களிடம் கூறிட, அவர்களும் குருவும், வாயவுமான நீங்கள் இப்

பாலனை காத்ததால இவ்ஊருக்கு பெயர் குருவாயூர் என்றும், இங்கேயே

பிரதிஷ்டை செய்யவும் என உவகையுடன் கூற, ஆனந்தமாகவே

குருவாயூர் வந்தாரே நம் கோகுல பாலன் நம் கோகுலபாலன்

பல்லவி

கோகுலபாலன் ஶ்ரீகிருஷ்ணன் குருவாயூர் வந்தானே இனி

குறையேதும் நமக்கில்லையே குறையேதும் நமக்கில்லையே

அனுபல்லவி

காலில் சலங்கை ஜதிகள் பாடிட, கழுத்தில் ரத்ன மாலைகள் அசைந்தாட

பஞ்சாயுதம் தரித்து பாலன் பவனிவர, அடியார்கெல்லாம் உற்சாகம் பொங்கிட

சரணம் (1)

மண்ணை தின்ற வாயில் உலகை காட்டி அன்னை யஸோதையை அயரசெய்த மாயன்

வெண்ணையையும் திருடிய பாலகனாம் நீலமேக சியாமளன் நித்ய அலங்கார ரூபன்

ஆயர்பாடி கோபியர்கள் தாபமுடன் பார்த்திட,ராதையுடன் கைகோர்த்து ஆடிய கள்வன்

பார்த்தனுக்கு சாரதியாய் தேரையும் ஓட்டி,பணிகள்பலவும் புரிந்த துவாரகைமன்னனான

சரணம் (2)

முப்பத்துமுக்கோடி தேவர்களும் பூமாரி பொழிய, மகிழ்ச்சியாய் யாவரும் கண்டு களிக்க

பஞ்ச வாத்தியங்கள் திக்கெட்டும் முழங்கிடவே, பக்தர்கள் அனைவரும் ஆனந்தமாய்

ஆடிப்பாட, நம் குறையாவையும் தீர்ந்து நிறைவாழ்வுபெற்றிடவே, வாருங்கள் நாம்

அனைவரும் குருவாயூருக்கு சென்றிடுவோம் உன்னிகிருஷ்ணனைக் காணவே