அருள் என்னும் அமுதினை + விருத்தம்
வைகுந்தமே இந்த காஞ்சி மா நகருக்கு வந்து விட்டதோ அந்த
சொர்க்கபோகம் என்பது இதுதானோ, என்றெண்ணியே உனது
திருவடிகளை தரிசித்து புளகாங்கிதம் அடைந்தேன் அப்பா
பத்தரை மாற்று பசும் பொன்னாய் திகழும் தேவாதி தேவரே
பெருந்தேவி மனமகிழ் அந்திகிரி வரதராஜ பெருமாளே
பல்லவி
அருள் என்னும் அமுதினை, அன்புடன் பொழிந்திடும்
கருணை உள்ளம் கொண்ட, அத்திகிரி வரதரே திரு
அனுபல்லவி
நாற்பது ஆண்டுகள் பிரிந்திருந்த உன்னை கண்டு களித்திட
நாற்பது நாட்கள் போதுமா எமக்கு கார்மேகவண்ணனே
அகிலம் போற்றும் காஞ்சிமா நகர் வித்தகரே வரதா நின்
அருமை பெருமைகள் எதை என்று எடுத்து கூறுவதோ திரு
சரணம் (1)
திரு காஞ்சிக்கு எங்கள் குறைகளை தீர்க்க வந்த பேரருளாளா
வரதா நீ நிற்கின்ற இத் திருவடிகள் மூவுலகையும் அளந்த தல்லவா
மாலோலா உன்னை இந்த சயனத் திருக்கோலத்தில் கண்ட என்
இரு விழிகளிலும் கண்ணீர் வழிந்தோடிட மெய் சிலிர்த்தேன் ஐயா
சரணம் (2)
அத்தி பூத்தார் போல் வந்து போகும் வித்தகரே
எத்திக்கிலும் புகழ் கொண்ட அத்தி வரதரே
நித்தமும் என் மனதில் நிறைந்திருப்பவரே
சித்தி எமக்கருள்வாயே அத்திகிரி வரதரே
ஒருமுறை உன்னை இரு கண்களால் பார்த்தாலே
வரும் துன்பங்களெல்லாம் ஓடிஒளிந்திடுமே (பனிபோல் அகன்றிடுமே)