அழகு மிகுந்த வனம் அமைத்து
அழகு மிகுந்த வனம் அமைத்து அதில் மலரும் மலரைப் பறித்து
அரங்கனுக்கு மாலைகட்டி அகம் மகிழ்ந்தார் பெரியாழ்வார்
மாலுக்கு மாலைகள் கட்டி மகத்தான பணி செய்து வந்த
மஹானுக்கு மகளாய் துளசிவனத்தில் கிடைத்தாள் பூதேவி
பொன்மலர் பூத்தது போல் பூமகளைக் கண்ட ஆழ்வார்
பூக்களோடு பூவாய் அணைத்து பூரித்து ஆனந்தம் கொண்டார்
நித்தமும் தான் வணங்கும் வித்தகனாம் அந்த அரங்கன் ம
சித்தம் மகிழ்ந்து தனக்களித்த வித்தையை நினைந்து மகிழ்ந்து
கோடிசூர்ய பிரகாஸமுடன் ஆடிப்பூரத்தில் பிறந்த பெண்ணிற்கு
கோதை என்று பெயர் சூட்டி ஆடிப் பாடிக் களித்தாராம்
குழந்தை கோதை குமரியாகி குடம் குடமாய் தண்ணீர் ஊற்றி
குலுங்கிய மலர்களைப் பறித்து அரங்கனுக்கு மாலை கட்டி மகிழ
ஆழ்வாரின் இல்லம் வரும் அடியார்கள் அனைவரும் அந்த
அரங்கனின் புகழ் பாடக் கேட்டு ஆனந்தம் மிக அடைந்தாள்
மணப்பருவம் அடைந்த மங்கை மாயனான அந்த ரங்கனை
மனாளனாய் தனக்கு வரித்து மனதில் கனவு பலவும் கண்டாள
காதில்குண்டலம் மினுமினுக்க, கழுத்தாரமும், கைவளைகளும் பளபளக்க
நீலவண்ண சிற்றாடை கட்டி, நெற்றியில் நீண்ட திலகமுமிட்டு
இடது பக்கக் கொண்டையில் விதவிதமாய் பூக்களைச் சுற்றி
இன்பமுடன் கன்னாடியில் தன் முகத்தையே பார்த்து ரஸித்தே
அரங்கனின் மாலைகளை ஆவலுடன் பார்த்த கோதை தான்
அணிந்து பார்க்க ஆசைகொண்டு அரங்கனையே மனதில் நினைந்து
மல்லிகை மாலை எடுத்தணிந்தாள் அதில் மஹாவிஷ்ணு முறுவலித்தார்
மட்டற்ற மகிழ்ச்சி கொண்டாள், மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்
ரோஜாமாலை எடுத்தணிந்தாள், அதில்ரங்கராஜன் தோன்றி கண்சிமிட்ட
சாமந்தி மாலையில் பார்த்தசாரதி புன்னகை புரிந்தார்
கோபாலனை ஆளவே அவள், கோபிகையாய் தானும் மாறி
மார்கழி நோன்பிருந்து மாயவனை வழிபட்டாள்
என்றென்றும் தன்னுடன் அந்த ரங்கனையே கோதை கண்டாள்
பாவை அவள் பூமாலையுடன், திருப்பாமாலையும் தொடுத்து அளித்தாள்
அனந்தனை ஆட்கொண்டாள், ஆண்டாள் எனப் பெயர் பெற்றாள்
ஆடிப்பூரத்தில் பிறந்த அந்த சூடிக்கொடுத்த சுடர்க் கொடி
சூடிக்கொடுத்த சுடர்கொடி
ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்கொடி
ஆண்டாள் பொன்மலரடிகளே சரணம்
கோதை நாச்சியார் பொன் மலரடிகளே சரணம்.